ART GALLERY

அடி மனத்து பிம்பங்கள்.....

அன்றொரு நாள் கொழுத்தும் வெய்யில், பஸ்ஸிலே எல்லோரும் பயணித்துக்கொண்டிருந்தோம் இரண்டே இரண்டு முகங்களை தவிர மற்றயவைகளெல்லாம் பரிச்சயமில்லாத முகங்களாய் தெரிந்தன. ஒவ்வொன்றும் வெவ்வேறு பிரதேசங்களை சேர்ந்தவை என்று எண்ணத்தோன்றியது. ஆமாம் உண்மையிலே வெவ்வேறு பிரதேசங்களை சேர்ந்தவைதான் அவை, வெவ்வேறு மொழிகள், பண்பாடுகள், கலாச்சாரங்கள் என்பன ஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பிய முகங்கள் என்பதை கட்டியம் கூறி நின்றன. என் பிரயாணத்தில் கூடவே உற்ற நண்பர்கள் இருவரும் பங்கெடுத்திருந்தனர். இறைவனுக்காகவே ஒன்று சேருகின்றவர்கள், அதே இறைவனுக்காகவே விட்டும் பிரிகிறவர்கள், தான் சார்ந்திருக்கின்ற நல்ல கொள்கைக்காக வேண்டியே வாழ்ந்து மடிகிறவர்கள்.
சுவாரஸ்யமாக சிரித்துப்பேசிக்கொண்டே வந்தோம், எங்கள் பிரயாண பஸ்ஸும் புழுதியை கிளப்பிக்கொண்டு பெரு வெளியினூடே கோடு கீறிக்கொண்டே வந்தது. எங்கு போகிறோம் என்று தெரியாது கண்ணுக்கெட்டிய தூரம் வரை வானமும் மணல் வெளியும் முத்தமிட்டுக்கொண்டே வந்தன. எங்களை கடந்து பாலை நிலத்துக்கேயுரிய பற்றை காடுகளும், மணற்குன்றுகளும், கற்பாறைகளும் இடையிடையே காட்சிகளாய் தோன்றி மறைந்து கொண்டே இருந்தன.
ஒருவாறாக நீண்ட பயணத்திற்கு பின்னர் நீர் நிலை போன்று தோற்றமளித்த பகுதி ஒன்றை காண முடிந்தது. எல்லோருக்கும் மட்டிலா மகிழ்ச்சி, அதுவரை நீரை காணாது வறண்டு போய்க்கிடந்த நாக்கு வெளிவர துடித்துக்கொண்டிருந்தது. சிலருக்கு அது காணல் நீராக தோண்றியிருக்கக்கூடுமோ என்ற ஏக்கம் கலந்த பார்வை. எது எப்படியோ அதை சுற்றி பற்றை காடுகளும் ஆங்காங்கே வரம்புகளும் தென்பட்டன. அது ஒரு விவசாய நிலம் போன்று காட்சியளித்தது. சிரிது நேர வளைவு நெளிவுப்பயணத்தினூடே அவ்விடத்தை அடைந்தோம்.
பஸ் நிறுத்தப்பட்டு அதில் இருந்த வாலிபர்கள் இறங்கி நீரினுள்ளே பாய்ந்தும் குதித்தும் விளையாடினர். நானும் எனது நன்பர்களும் மற்றயவர்களை போல் அக்குளத்தில் நீராடச்சென்றோம். அங்கு மற்றய வாலிபர்கள் நீராடிக்கொண்டிருந்தனர். பூத்துக்குழுங்கும் பூமிதான் அழகென்றில்லையே கல்லி ஏந்தும் பூமி கூட ஒருவித அழகுதானே.., நாங்கள் மூவரும் அப்பகுதியின் அழகை ரசித்தவாறு கதையளந்து கொண்டிருந்தோம். அந்த நீர்ப்பரப்பு எங்கள் மனதில் ஆழமாக இடம்பிடித்துக்கொண்டது. அதையே வெறிக்கப்பார்த்துக்கொண்டிருந்தேன். அந்நீர்ப்பரப்புக்கு இடையிடையே சேறுதேய்ந்த வண்டல் நிறத்தையுடைய மேடுகள் நீருக்கு மேலே ஆங்காங்கே தெரிந்து கொண்டிருந்தன. அந்நீர் நிலையானது நிலத்திலிருந்து அண்ணளவாக ஒரு மீற்றர் உயரமுள்ள ஒரு பாறை தொடரின் நடுவே இருப்பது போன்று தோற்றமளித்தது.
அப்போது மணி பி.ப ஒன்றரையிருக்கும் எனது நன்பர்கள் இருவரும் பாய்ந்து நீராடினார்கள். அதன் போது அந்த நீர் சேற்று நிறமாக களங்கத்தொடங்கியது. அவர்கள் குளித்து முடியும் வரை காத்திருந்தேன். ஏனோ தெரியவில்லை அக்குளத்து நீர் படிப்படியாக வற்றத்தொடங்கியது. நான் குளிக்க தயாராகும் போது அக்குளத்தின் நீர் மட்டம் அதன் அடியிலுள்ள சேற்று மட்டம் வரை இருந்தது. இனிமேலும் நான் குளிப்பதற்கு பதிலாக சேற்றை மேலே பூசிக்கொண்டுதான் வரவேண்டுமென்றிருந்தது. கடைசியாக நானும் என்னுடைய வயதையொத்த இன்னுமொருவனும், பிரயாணத்தலைவன் போன்று தென்பட்டவனும் தான் இருந்தோம். உடம்பெல்லாம் சேற்றை பூசிக்கொண்டு ஐரோப்பிய தேசத்தவன் திரு திருவென முழித்துக்கொண்டு நின்றான். ஆபிரிக்க தேசத்தவனும் நானும் சேற்றுக்கு பழக்கப்பட்டவர்கள் போல நின்று கொண்டிருந்தோம்.
அப்பொழுதான் அம்மூவரும் வந்தனர் ஒரு வயதானவரும் கூடவே இரு பெண்களும் வந்திருந்தனர். அவ்வயதானவர் அவ்விரு பெண்களின் தந்தையாயிருக்க வேண்டும் என்று ஊகித்துக்கொண்டேன். அவர்கள் முகத்தில் சோர்வு இழையோடிக்காணப்பட்டது. வயலில் வேலை செய்து களைத்துப்போயிருந்தது அவர்கள் முகம், அவர் மகள்மார் இருவரும் இஸ்லாமிய முறைப்படி உடையணிந்து அழகாக இருந்தனர். இஸ்லாமியர்களை கண்டதும் எங்களுக்கு ஒரே சந்தோஷம். அம்முதியவர் நாங்கள் வெவ்வேறு தேசத்தை சேர்ந்தவர்கள் என்பதை புரிந்து கொண்டார் போலும் சைகை செய்து ஏதோ அறபி மொழியில் கேட்டார். எங்களுக்கு ஏதும் புரியவில்லை ஒருத்தருக்கொருத்தர் முகங்களை மாறி மாறி பார்த்துக்கொண்டோம். சுதாகரித்துக்கொண்டே பிரயாணத்தலைவன் போன்று தென்பட்டவன் ஆங்கிலத்தில் ஊரை பற்றிகேட்டான். அதற்கு அப்பெரியவர் இது பலஸ்தீன் இதற்கு பக்கத்தில்தான் லெபனான் உள்ளது என்று கூறினார். அப்பொழுது நான் எனக்குத்தெரிந்த அறிவை பயன்படுத்தி இது "கஸா" நிலப்பரப்பாக இருக்கக்கூடும் என ஊகித்துக்கொண்டேன். ஏதோ மூளையில் பளிச்சிட்டவனாக, சுற்றும்முற்றும் பார்த்தேன் தூரத்தே புல்டோஸர்களால் நொறுக்கப்பட்ட குடியிருப்புக்களையும் அதைச்சுற்றி சிறு சிறு குடிசைகளையும் ஆங்காங்கே கண்ணுற்றேன். ஆ! உண்மையிலேயே என் ஊகம் நிரூபனமானது. அதுதான் "கஸா" நிலப்பகுதி ஆண்டாண்டு காலமாக ஒலிவ் மரத்தை சுமந்த பூமி அது, வெகுசன தலைவர்களை உருவாக்கும் தொழிற்சாலை, வீரத்தாய்மார்களை கொண்ட பூமி அது. நினைக்கும்போது உடம்பெல்லாம் புல்லரித்தது. புனித குர்-ஆனில் முன்னறிவுச்செய்யப்பட்டுள்ளவாறு எந்த மக்கள் தனது புனித வணக்கஸ்தலமான பைதுல் முகத்தஸை மீட்டெடுப்பதற்காகவும், தங்களது ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டெடுப்பதற்காகவும் இறுதி நாள்வரை போராடுவார்களோ அந்த இலட்சிய மக்களை கொண்ட பூமியல்லவா இது! எனக்குள் நானே விக்கித்துப்போய் நின்றேன்.
அதற்குள் அப்பெரியவர் எங்களை அழைத்துக்கொண்டு சற்று தொலைவிலுள்ள தனது வீட்டுக்கு தம் இரு மகள்மாருடன் அழைத்துச்சென்றார். அங்கு அவர் எங்களிடம் சிறிது நேரம் இன்முகத்துடன் ஆங்கிலத்திலும் அறபியிலும் மாறி மாறி உரையாடிவிட்டு தன் மகள் மாரை உபசரிக்கும்படி ஏவிவிட்டு தன்வேலைகளில் ஈடுபடலானார். அங்கு இருவீடுகள் மிகவும் சிறியதாகவும் நேர்த்தியானதாகவும் அரேபிய கட்டட கலை பாணியில் எதிர் எதிரே அமைக்கப்பட்டிருந்தன ஒரு சிறிய அறையும் மண்டபமும், சமையலறையும், விறாந்தையுமாக பார்ப்பதற்கு ஜனசக்தி திட்ட வீடுபோல அமைந்திருந்தன. அந்த வீட்டின் கோடிப்புறத்திலே நீரை பெறுவதற்காக பெரிய பீப்பாய் போன்ற அமைப்பு நிலத்தில் பதிக்கப்பட்டு அதில் ஊறிவரும் நீரை பயன்படுத்தும் அமைப்பு காணப்பட்டது. நாங்கள் அதிலே எங்கள் உடம்பில் ஒட்டியிருந்த சேற்றை கழுவினோம். பின்னர் அவ்வயசானவரும் அவரது பிள்ளைகளும் அவர்களுக்கே உரிய பாணியில் எங்களை உபசரித்தார்கள். அவர்களின் அன்பான முகங்களும், கணிவான பேச்சுக்களும், விருந்தோம்பல் பண்புகளும் எங்களை வெகுவாக கவர்ந்து விட்டன.
உபசாரம் முடிந்து சிறிது நேரத்தின் பின்னர் அவ்விரு பெண்களும் வசற்படியே அமர்ந்திருக்கக்கண்டேன். அவர்களை அணுகி ஆங்கிலத்தில் மெல்ல பேச்சுக் கொடுத்தேன். அவர்களும் என் கேள்விகளுக்கெல்லாம் "yes" அல்லது " no" என்றும் தலையை ஆட்டியும் பதில் சொன்னார்கள். திடீரென அவசரப்பட்டு ஏதோ யோசனை தோன்றியவனாக "How is going the governing of Hamash here?" என்று கேட்டுவிட்டேன். ஏனெனில் அது நான் நேசிக்கின்ற புன்னிய பூமியல்லவா..., அவர்களும் பேந்த பேந்த முழித்தார்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். எனக்குத்தெரிந்தது ஆங்கிலமும் தமிழும் தானே.. நான் தமிழ் பேசுபவன் என்பதை அவர்களுக்கு உணர்த்துவதற்காக, " can you speek tamil?" என்று குறும்பாக கேட்டேன். என்ன அதிசயம் அவர்களில் ஒருத்தி முண்டிக்கொண்டு "I can" என்று பதிலளித்தாள். நான் ஆச்சரிய மேலீட்டால் புருவங்களை உயர்த்தியவாறு "எப்படி" என்று கேட்டேன். அதற்கவள் கல்லூரியிலே மூன்றாம் மொழியாக தமிழை கற்றாளாம் என கூறினாள். நானும் என்னுள் தமிழின் பெருமையை பற்றி வியந்து போனேன். மீண்டும் அவளிடம் "ஹமாஷின் நிருவாகம் எப்படி உள்ளாது? இஸ்ரவேலர்களின் அடாவடித்தனம் எப்படி இருக்கிறது?" என கேட்டேன். கேட்டதுதான் தாமதம் அம்மங்கையர் இருவரது கண்களும் குளமாயின, இருவரும் கலங்கிப்போனார்கள். வார்த்தைகள் அவர்களிடமிருந்து வர முரண்டு பிடித்தன. அவர்கள் இருவரும் தன் தாய், சகோதரங்களை பறிகொடுத்தார்களோ..,அல்லது வீடுவாசல்களை இழந்தார்களோ.. என்னவோ தெரியவில்லை. நான அவர்களிடத்தில் மன்னிப்பு கேட்டுவிட்டு பேச்சை மாற்றத்தொடங்கினேன். "அருகிலுள்ள குளத்தில் ஏன் வண்டல் நிறம் போன்ற தாவரங்கள் காணப்படுகின்றன?" என்று ஏதுமறியாதவன் போல கேட்டேன். அதற்கு துருதுருத்த பார்வையும் துடினமும் நிறைந்த இரண்டாமவள் தாவரவியல் ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் அளித்த விளக்கம் என்னை அசத்திவிட்டது. அவளின் அறிவுத்திறனையும், சமயோசித புத்தியையும் மெச்சுவதற்கு வார்த்தைகள் தேடினேன். அதற்குள் பிரயாணத்தலைவன் புறப்பட வேண்டும் என்று அவசரப்படுத்ததொடங்கினான்.
ஏழைகளின் வீட்டிலிருந்து புறப்பட மனமில்லாமல் புறப்பட்டேன். பெயரையும் முகவரியையும் கேட்டு வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தேன் அது நிராசையாகி விட்டது. இங்கேயே தங்கி சமூக புனரமைப்புக்காகவேண்டி பாடுபடவேண்டும் என மனக்கோட்டை கட்டுகிறேன் ஆனால் அது இப்போது முடியாது என்னை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய தாய் மற்றும் சகோதரங்கள் என்னை பொறியியலாளனாக எதிர்பார்த்து காத்திருப்பார்களல்லவா.. அவர்களுக்கென்றும் சில கடமைப்பாடுகளை சுமந்து கொண்டிருக்கின்றேனே.. என்று எண்ணியவாறாக அவ்விடத்தை விட்டு அகழ்கிறேன். இன்ஷா அல்லஹ் மீண்டும் இதே இடத்துக்கு வந்து அந்த மக்களுடைய மறுமலர்ச்சிக்காக பாடுபடுவேன் என்ற உறுதிப்பாட்டுடன் பஸ் யன்னலருகே உட்கார்ந்து என் நினைவுகளை மீட்டிக்கொள்கிறேன். என்றுமே மறக்கமாட்டேன் அந்த வண்டல் மண் குளத்தையும் தரைமட்டமாக்கப்பட்டிருக்கும் குடியிருப்புக்களையும்.
என் முதுகில் யாரோ தட்டுவது போன்ற உணர்வு, கண்ணை கூசிக்கொண்டு ஒருக்களித்து பார்த்த போது எனது வாப்பா என்னை பஜ்ர் தொழுகையை நிறைவேற்றுவதற்காக எழுப்பிக்கொண்டிருந்தார். இப்பொழுது நான் கண்டது கணவு என்பதை என்னால் உணர முடிந்தது. அடக்கி ஒடுக்கப்படுகின்ற மக்களது வேதனைகளை என்னால் கூட உணரமுடிகிறதே.. என எண்ணியவாறு காலை கடங்களை முடிக்கச்சென்றேன்.
-(யாவும் கற்பனை)
ஆக்கம்: KMM.Hikam
பேராதனைவளாகம்

இரண்டு என்றாலும் ஒன்று

கண்கள் இரண்டானாலும்
பார்வை என்றும் ஒன்று
கரைகள் இரண்டானாலும்
ஓடும் நதி ஒன்று
சிறகு இரண்டானாலும்
பறப்பு என்பது ஒன்று

குயில்கள் வேறு ஆனாலும்
கூவும் ஓசை ஒன்று
உறவும் பிரிவும் இரண்டானாலும்
தாங்கும் உள்ளம் ஒன்று
உண்மை பொய் இரண்டானாலும்
பேசும் வார்த்தை ஒன்று
இன்பம் துன்பம் இரண்டானாலும்
ஏற்கும் இதயம் ஒன்று

வளர்தல் தேய்தல் இரண்டானாலும்
பிறை என்பது ஒன்று
வெற்றி தோல்வி வேறானாலும்
போட்டி என்பது ஒன்று
ஆறு கேணி வேறானாலும்
நீர் என்பது ஒன்று
கள்ளும் பாலும் வேறானாலும்
வெண்மை என்பது ஒன்று
களவும் பொய்யும் வேறானாலும்
சேரும் பாவம் ஒன்று
இரவும் பகலும் வேறானாலும்
நாள் என்பது ஒன்று
பூவும் காற்றும் வேறானாலும்
மலர்தல் என்பது ஒன்று
தென்றல் புயல் வேறானாலும்
காற்று என்பது ஒன்று
செடிகள் இரண்டு ஆனாலும்
பூவின் மணம் ஒன்று
உள்ளம் இரண்டு என்றாலும்
காதல் என்பது ஒன்று
பக்கம் இரண்டு கொண்டாலும்
இலை என்பது ஒன்று
விழுதுகள் பற்பல என்றாலும்
ஆல் என்பது ஒன்று
எறும்பு யானை என்றாலும்
உள்ளே உயிர் ஒன்று
இழமை முதுமை வேறானாலும்
தழுவும் மரணம் ஒன்று
ஏழை செல்வர் ஆனாலும்
வாழ்வின் முடிவது ஒன்று
ஆண்டி அரசன் என்றாலும்
சேரும் காடு ஒன்று
எல்லாம் இங்கே ஒன்றேயானால்
உனக்குள் பிரிவு ஏனடா?
ஒற்றுமை நீங்குதல் கேடடா
நீதி என்பது ஒன்றென்போம்
நியாயம் என்பது ஒன்றென்போம்
சாதியென்பது ஒன்றென்போம்
சமயம் என்பதும் ஒன்றென்போம்

வெற்றியை மனதினுள் வைத்திடு
தோல்வியை படிகளாய் மாற்றிடு
அத்ர்மத்தை அடியோடு அழித்திடு
தர்மத்தை காத்திட உழைத்திடு
உன் உள்ளக் கோவிலைத்திறந்திடு
அன்பெனும் தெய்வத்தை இருத்திடு
உன்மேல் நம்பிக்கை வைத்திரு
நல்லதை நாளும் நினைத்திடு
நினைத்ததை முடித்திடவிழித்திடு
இயற்கையை என்றும் மதித்திடு
தெய்வமே உனைத்தேடும் காத்திரு.....
(நன்றி- இணையம் )


பல்கலைக்கழக வாழ்க்கை.......!


பெருமானார் (ஸல்) அவர்கள் மீதும் அன்னார் குடும்பத்தின் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் உரைத்தவனாக............

மகிழும் இந்த வாழ்க்கையினை
நெகிழ்வுடனே நமக்களித்த
நாயனை நினைத்திருப்போம்
நிதமும் நாமும் செல்கையிலே!

வாழத்தெரியாத வாலிபர் நாம்
வாழ்வை புரியவைத்த இடமிதுவை
போற்றிடவே அவன் துணையாய்
கோர்த்திடுவோம் பல கையும் ஒரு கையாய்!

ஒற்றுமையை உணரவைத்து
வேற்றுமையை புரியவைத்து
மாற்றுகையை புரிந்திட
வழிகாட்டிடும் இடமிதுவே!

கணவுகளை நனவாக்கி
கணவு தோனுவதை உருவாக்கி
எம் உணர்வுகளை சிறப்பாக்கி - எம்மை
சமூகத்திற்கு உவப்பாக்கி வைத்ததுவே!

இந்த இயற்கையை ரசித்தபடி - எம்
வலக்கையை இணைத்து நின்று
இந்த உலகிற்கு கிழக்கையே காட்டிநிற்போம்
கை கொடுங்கள் தோழர்களே!

                                                                சுஹூதி அ.க.மு
                                                                பொறியியற் பீடம்,
                                                                பேராதனை பல்கலைக்கழகம்